Last Updated on 1 week by ChennaiRealties

1908 ஆம் ஆண்டின் பதிவு சட்டத்தில் தமிழ் நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட 77A திருத்தப் பிரிவு,  உயர்நீதி மன்றத்தின் பல பெஞ்சுகள் முன் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.

இந்த வழக்குகளில் உள்ள சட்டப்பிரச்சினைகளை ஆழமாக விசாரிக்க வேண்டும் என்று கருதிய உயர்நீதிமன்றம், எல்லா வழக்குகளையும் ஒரு விரிவாக்கப்பட்ட லார்ஜர் பெஞ்சுக்கு அனுப்பியது. அவற்றின் மீது இப்போது விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

வழக்கின் நிலை | Status of Hearings

பல கட்ட விசாரணைகளுக்குப் பின், இறுதியாக 2024 ஏப்ரல் 15, 16 தேதிகளில் விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணைகளுக்குப் பின், ஏப்ரல் 22 ந் தேதிக்குள் வழக்கறிஞர்கள் தங்கள் எழுத்துப் பூர்வ வாதங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, தீர்ப்பின் தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்துள்ளனர் நீதியரசர்கள்.

ஆக, தீர்ப்பின் தேதிக்காக அனைத்து தரப்பினரும் காத்திருக்கின்றனர்.

லார்ஜர் பென்ச்சில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் இந்த வழக்கில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

முந்தைய கட்டுரைகள் | Previous Articles

இந்த வழக்கைப்பற்றிய முழு விவரமும் தெரிந்து கொள்ள கீழ்கண்ட லிங்குகளை கிளிக் செய்யவும்

  1. பதிவு சட்டம் தொடர்பான முதல் கட்டுரை
  2. முதல் கட்டுரையின் தொடர்ச்சி

திருத்தத்தின் விவரங்கள் சுருக்கமாக | Brief Details of the Amendment

1908 பதிவுச் சட்டத்தில் புதிய 77A பிரிவை புகுத்தி செய்யப்பட்ட திருத்தம், மாவட்ட பதிவாளர்களுக்கு மோசடி சொத்து ஆவணங்களை ரத்து செய்ய அதிகாரத்தை வழங்குகிறது.

புதிய பிரிவு 77A | New Section 77A

மோசடிப் பத்திரங்களை ரத்து செய்ய சிவில் நீதிமன்றங்களைத் தான் நாட வேண்டிய நிலை இன்று உள்ளது. இது  எத்தனை காலம் ஆகும் என்ற காலவரையறை இல்லாததால், மக்களின் கோரிக்கை மற்றும் நீதிமன்ற அறிவுறுத்தல் காரணமாகத் தான் இந்தத் திருத்தம் அரசால் கொண்டு வரப்பட்டது.

நீதிமன்றத்தில் விவாதிக்கப்படும் முக்கிய கேள்விகள் | Key Issues Being Debated

ஆரம்பத்தில், இந்தத் திருத்தம் பழைய பத்திரங்களுக்கும், அதாவது இந்தத் திருத்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன் பதியப் பட்ட பத்திரங்களுக்கும் பொருந்துமா என்பது தான் முக்கிய விவாதமாக இருந்தது.

ஆனால், இப்போது இன்னும் பல முக்கிய வாதங்கள் முன் வந்துள்ளன.

சொல்லப்போனால், இந்தச் சட்ட திருத்தமே செல்லாது என அறிவிக்க வேண்டும் என்ற கோணத்தில் தான் திருத்தத்தை எதிர்க்கும் தரப்பினர் வாதத்தை முன் வைத்துள்ளனர்.

அந்த வாதங்களின் தொகுப்பைக் கீழே தருகிறோம்:

ஒரு ஆவணம் மோசடி ஆவணமா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கு சிவில் நீதிமன்றத்திற்கு மட்டுமே உரிமை இருக்கிறது. மாவட்ட பதிவுத் துறைத் தலைவர் ஒரு சட்டம் பயின்றவராக இருப்பது அரிது. பதவி உயர்வு பெற்று அந்தப் பதவிக்கு வருபவர். எனவே, அவரிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைக்க முடியாது.

2. ஒரு மோசடிக்குப் பின் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் நிலை | Status of Subsequent Documents

ஒரு மோசடி ஆவணம் பதியப்பட்டு, அந்த மோசடி ஆவணத்தைத் தொடர்ந்து பல ஆவணங்கள் பதியப்பட்டு இருக்கும். அதனைத்தொடர்ந்து அந்த சொத்து உருமாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.வாங்கியவர்களோ அல்லது விற்பவர்களோ அப்பாவிகளாக (innocent buyers or sellers) இருப்பார்கள்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர் ஒரு மோசடி ஆவணத்தை ரத்து செய்யப் புகார் மனு செய்து அந்த மோசடி ஆவணம் ரத்து செய்யப்பட்டால்,  அதன்பிறகு ஏற்படுத்தப்பட்ட சொத்துப் பரிமாற்ற ஆவணங்களின் நிலை பற்றி இந்தச் சட்டத் திருத்தம் எதுவும் சொல்லவில்லை.

அதாவது, மோசடி ஆவணத்தை ரத்து செய்வது பற்றி இந்தச் சட்டத்தில் இருக்கும்போது, மோசடி ஆவணத்தைத் தொடர்ந்து பதியப்பட்ட பத்திரங்களை ரத்து செய்யலாமா, கூடாதா என்பதைப் பற்றித் தெளிவாக இந்தச் சட்டப் பிரிவு 77Aலோ அல்லது வேறெங்குமோ எதுவும் குறிப்பிடப்படவில்லை.

3. தவறு செய்த அதிகாரியே புகாரை விசாரிக்கலாமா? | Can officials involved in fraudulent document issue, investigate their own wrongdoing?

ஒரு ஆவணமானது மோசடி ஆவணம் என கண்டறியப்பட்டால், அந்த மோசடி ஆவணத்தை பதிவு செய்த பதிவாளர் மீது புதிய சட்டப் பிரிவு 81A படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படலாம். அப்படி இருக்கும் போது, அவர் பதவியில் இருக்கும்போது அந்த ஆவணம் மோசடி ஆவணமா இல்லையா என்பதை உறுதி செய்யும் அதிகாரம் அவரிடமே இருக்கக் கூடாது.

4. விசாரணை இன்றி ஆவணங்களை ரத்து செய்வது நடந்தால்… | Cancellation of Documents Without Investigation

இந்தச் சட்டம் நடைமுறைப் படுத்தினால், எந்த வித விசாரணையும் இன்றி ஒரு ஆவணத்தை மாவட்டப் பதிவாளர் ரத்து செய்ய வாய்ப்பிருக்கிறது.

5. வழக்கு நிலுவையில் இருக்கும் போது… | Pending Civil Court Cases

ஏற்கனவே பதியப்பட்டுள்ள மோசடிப் பத்திரம் சம்மந்தமாக சிவில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அது சம்மந்தமாக ஒரு புகார் மனுவை மாவட்டப் பதிவாளர் விசாரணை செய்யும்போது, ஒரே பிரச்சினை சம்மந்தமாக ஒரே ஆவணம் சம்மந்தமாக இரண்டு இடங்களில் விசாரணை நடக்கும் நிலை ஏற்படலாம். இது மேலும் குழப்பத்தைத் தான் ஏற்படுத்தும்.

6. முடிக்கப்பட்ட வழக்குகள் மீதும் புகார் அளிக்க வாய்ப்பு | Scope for Reopening Decided Cases

சிவில் நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்த பிறகு, மறுபடியும் இந்தப் பிரிவு 77A ன் கீழ் மாவட்டப் பதிவாளருக்கு மனு செய்யும் வகையில் இந்த சட்டப் பிரிவு இருக்கிறது.

7. புகார்களுக்குக் கால வரையறை இல்லாமை | No Time Limit for Filing Complaints

இந்தச் சட்டப் பிரிவில் கால வரையறை எதுவும் கூறப்படவில்லை. எனவே எந்த ஒரு காலத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ள மோசடி ஆவணங்களையும் ரத்து செய்வதற்கு இந்த சட்டப் பிரிவின் கீழ் புகார் மனு செய்ய முடியும்.

8. விதிகள் முறையாக வகுக்கப் படவில்லை | Rules are not framed as per procedure

இந்த சட்டத் திருத்தத்திற்கான உரிய விதிகள்(Rules) முறையாக வகுக்கப்படவில்லை. பதிவுத்துறைத் தலைவரின் சுற்றறிக்கை மூலம் மட்டுமே விசாரணைகள் நடைபெறுகிறது.

சட்டத் திருத்ததின் எதிர்காலம் | Future of the Amendment

இப்படி வலுவான வாதங்களை சட்டத் திருத்தத்தை எதிர்ப்பவர்கள் முன்வைத்துள்ள பின்னணியில் தான் இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு எப்படி வந்தாலும், எதிர் தரப்பு மேல்முறையீட்டிற்கு செல்வதைத் தடுக்க முடியாது என்பதாகத் தான் தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.


பொறுப்பு துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள விவரங்கள், கல்வி மற்றும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இது சட்ட ஆலோசனை அல்லது நிதி ஆலோசனைக்காக தரப்படவில்லை. இதில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எந்த முடிவுகளையும் எடுப்பதற்கு முன்பு, வாசகர்கள் தங்கள் சொந்த சுதந்திரமான ஆராய்ச்சியை மேற்கொள்ளவும், நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.-Ed


Disclaimer: The information contained in this article is for educational and informational purposes only. It is not intended to be legal or financial advice. Readers are advised to do their own independent research and consult with professionals before making any decisions based on the information in this article-Edit

Your subscription could not be saved. Please try again.
Your subscription has been successful.

Sign up to receive notifications when we publish new posts

Privacy Policy

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *